
சென்னை:
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 18-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அலுவல் ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் 3 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வெள்ளிக்கிழமை அன்று காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய் தனி தீர்மானம் கொண்டுவந்தார்.
அதில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் கோரிக்கையையும் முதல்-அமைச்சர் ஏற்ற பிறகு தீர்மானம் ஒர்மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது.
முதல் நாள் தி.மு.க. மற்றும் த.வெ.க. எம்.எல்.ஏக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் 22ம் தேதி மீண்டும் அவை தொடங்கியது. அப்போது புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோரியதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தன
சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியபோது தேசிய கீதம் தொடர்பான விவாதம், தமிழ்நாட்டில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, சட்ட-ஒழுங்கு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், புதிய நடுவர் மன்றம், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய த.வெ.க. நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?, அமோனியா கசிவால் உரிழப்பு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் த.வெ.க. பக்கம் சாய்வது ஏன்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சிகள் அடுக்கிக் கொண்டே சென்றன.
இன்றைய இந்நிலையில் சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்-வர் விஜய் இன்று பதிலுரை வழங்குகிறார். தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு பிரச்சினை உள்பட எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு சட்டசபையில் முதல்-வர் விஜய் இன்று விரிவான பதிலளிக்கிறார். இதில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அவர் என்ன பதில் அளிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.