
சென்னை:
சட்டசபையில் இன்று ஜூன் 23-ந் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு முதல்வர் விஜய் பதில் உரையாற்றினார். அப்போது திமுகவை மறைமுகமாக விமர்சித்தார். முதல்வர் விஜய்யின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து முதல்வரின் பேச்சை கண்டித்து சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தோம். வழக்கம்போல தேர்தல் பிரச்சாரங்களில் பேசுவது போன்ற சினிமா பாணியிலான வசனங்களை அவர் தனது பதிலுரையில் கையாண்டார்.
அவையில் சில தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பதிவு செய்யத் தொடங்கினர். உடனே நானும், எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்து, ‘பாயிண்ட் ஆப் ஆர்டர்’ விதியின் கீழ் பேசுவதற்கு அனுமதி கோரினோம். சபை மரபுப்படி ஒரு தவறான கருத்தை மறுப்பதற்குப் பேசுவது எங்கள் உரிமை. ஆனால், சபாநாயகர் எங்களை அனுமதிக்கவில்லை.
41 லட்சம் மாணவர்கள் பயனடைந்த திட்டங்கள் ஏன் முடக்கப்பட்டன? மின்வெட்டு, பயிர் கடன் தள்ளுபடி, மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்துக் கேட்டால், தெளிவான பதிலின்றி விவசாயிகளைத் திமுக தூண்டிவிடுவதாகக் கொச்சைப்படுத்துகிறார். திருவள்ளூரில் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நியாயமான போராட்டத்தை நடத்துகிறார்கள். இதற்கும் திமுக மீது பழி போடுகிறீர்கள். தவெக ஆட்சிக்கு வந்த 40 நாட்களில் 24 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன்.
சட்டமன்றத்தைச் சினிமா தியேட்டர் போலவும், ஷூட்டிங் ஸ்பாட் போலவும் மாற்றிவிட்டார்கள். சபாநாயகரிடம் அனுமதி கேட்டு ‘ஆக்ஷன்’, ‘கட்’ என்று பேசும் சூழல் நிலவுகிறது. முதலமைச்சரின் அரை மணி நேரப் பேச்சில், சமூக வலைதளங்களில் பதிவிடக் குறைந்தது 10 ரீல்கள் தேறும். அமைச்சர்கள் சிலர் டான்ஸ் ஆடும் அளவிற்குச் சென்றுவிடுவார்களோ என்று தோன்றுகிறது. விரைவில் சட்டமன்றத்திற்குள் கேரவான், மேக்கப் கலைஞர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள் என அனைவரும் வந்துவிடுவார்கள் போலிருக்கிறது.
தேர்தல் வாக்குறுதிகளான மாதம் ரூ.4500, மகளிருக்கு உரிமைத் தொகை, ரூ.2500, சிலிண்டர் மானியம் போன்றவற்றைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. திமுக ஆட்சியின் பழைய திட்டங்களைத் தொடர்வதைத் தாண்டி, எந்தப் புதிய அறிவிப்பும் இல்லை. இத்தகைய செயல்பாடுகள் இந்த ஆட்சியை ஒரு கேலிக்கூத்தாகவும், சினிமாத்தனமான ஆட்சியாகவும் மாற்றியுள்ளது. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.