தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தல் முடிவுகள் மே மாதம் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. தவெக 108 இடங்களில் வெற்றி வெற்றது. காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (2), இந்திய கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
17-வது சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 146 பேர் புதியவர்கள். எனவே, சட்டசபை மரபுகள் என்ன, அவையில் எதை பேசவேண்டும், எதை பேசக்கூடாது என்பதை எம்.எல்.ஏ.க்கள் தெரிந்துகொள்வதற்காக 2 நாள் புத்தாக்க பயிற்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இன்றும் நடைபெறுகிறது. இந்த பயிற்சியை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றுகிறார்.
இதற்காக, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இருந்து காலை 9.30 மணியளவில் கவர்னர் அர்லேகர் காரில் புறப்படுகிறார். காலை 9.50 மணிக்கு தலைமைச் செயலகம் வரும் அவரை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்கிறார்.
கவர்னர் அர்லேகர் அவைக்கு அழைத்து வரப்படுகிறார். காலை 10 மணிக்கு சபாநாயகர் இருக்கைக்கு வரும் அவர், தனது உரையை ஆங்கிலத்தில் தொடங்குகிறார். கவர்னர் அர்லேகரின் உரையை, வலதுபுற இருக்கையில் அமர்ந்திருக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழில் வாசிப்பார். இடதுபுற இருக்கையில் கவர்னரின் முதன்மை செயலாளர் ஷஜன் சிங் சவான் அமர்ந்திருப்பார்.
கூட்டம் முடிந்ததும் அனைத்து உறுப்பினர்களிடமும் விடைபெற்று கவர்னர் அர்லேகர் புறப்பட்டு செல்வார். அதன்பின்னர், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். அனேகமாக 3 அல்லது 4 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.
