தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மைக்கேல் தங்கராஜ் அரசு உதவிபெறும் பள்ளிகள் கட்டணம் வசூல் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழக அரசு 2008ல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் சிறப்பு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் பல பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து அனுமதியற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
அரசாணைக்கு முரணாக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசின் விதிமுறைகள் மற்றும் அரசாணைகளுக்கு மாறாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதை உறுதி செய்ய தேவையான வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ் குமார், ஜோதி ராமன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கோரிக்கைகளை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அரசாணை வெளியீட்டும், எவ்வாறு சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது?” என கேள்வி எழுப்பி, இது தொடபாக தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
